ஒரு கொளை கதை – பாகம் 2

2009 நவம்பர் 6

உன்னைப்போல் மற்றொருவன். நான்தான். ஊருக்கு வெடிவைக்கையில் மட்டும் வெள்ளை சட்டையில் உலவுவேன். மற்றபடி ஜீன்ஸ் டீ-ஷர்ட். காப்பி கலரில்.

எனக்கு செய்யும் தொழிலே கருமம். பல ரகசிய சிநேகிதிகள். ரகசியம்னா, பூஸ்ட் இஸ் த சீக்ரெட் ஆஃப் மை எனர்ஜின்னு கபில்தேவ் மாதிரி அனைவருக்கும் தெரிந்த ரகசியம் இல்லை. எனக்கே எம்புட்டு சிநேகிதிகள்னு தெரியாது. அவ்ளோ ரகசியம்.

ஆரம்ப காலத்தில் போன்கால்கள் மட்டும் சிநேகமாக தேவைகளை சொல்லும். நான் செவிமடுப்பேன். அழகிய குமரிகள் தொலைக்கும் கொண்டை ஊசி, செல்லிடைபேசி மற்றும் நாய் ஃப்ரெண்ட், பாய் ஃபிரெண்ட் என்று பலதை துப்புதுலக்கி கண்டுபிடித்து தருவது என் வேலையாய் இருந்தது. நாளடைவில் தொழில் சூடு பிடித்து, டெலிபோன் பில் எகிறி, வைர்லெஸ் ஆகி பிறகு டெலிபோன்லெஸ் ஆகி, நேரடியாகவே சிநேகதிகளிடம் தொடர்புகொண்டேன். அவர்களது அழகிய கணவர்கள் வேறு தொடர்பு வைத்துள்ளனரா, அந்தப்பெண் நம் கஸ்டமரைவிட அழகா, டைகர் பாம் போட்டு கணவன்மார்களின் மார்பு சூடாகும்வரை உள்ளும் புறமும் தடவி விடுகிறார்களா… இப்படி மார்பு சைஸ்வரை அளந்து சொல்லவேண்டும். என் கஸ்டமர்கள் பலவேளைகளில் கஷ்டமர்கள்.

read more…

ஒரு கொளை கதை – பாகம் 1

2009 அக்டோபர் 30

பிரேதத்தை முதலில் பார்க்கையில் அது கொலை என்று எனக்கு உரைக்கவில்லை. அரைமயக்க நிலையில் இருந்த ’அதை’ பிரேதமா என்றே ஊர்ஜிதப்படுத்த முடியவில்லை. நான் கத்துகுட்டி. ஊர்ஜிதத்தையே ஜி யை விட்டொழித்து தெளிவான தமிழில், சிந்தித்து சரிபார்த்து நிருபணம் செய்துகொள்ளல் என்று பல வார்த்தைகளில் எனக்கு விளக்க தெரியாத வயது. அடுத்த வாக்கியம் எப்படி எழுதுவது என்று இதோ, இப்போது திணறுகிறேனே, அப்படித்தான் திணறினேன் அன்றும். பிரேதமா பொணமா என்று. கதையாய் தமிழில் எழுதினால் என் உயிருடன் முடிக்கமுடியுமா என்று.

சரி, கிடப்பது கிடக்கட்டும் கிழவிய தூக்கி அடுப்பில வைப்போம் என்று தொடங்கினேன்.

அன்று ஞாயிறு. இக்கதைக்கு கிழமை முக்கியம் இல்லை. சும்மா ஒரு பில்டப்புக்காக சொல்கிறேன். மறந்துவிடுங்கள். ஆனால் மேலே அடுப்பிலிட்ட கிழவியை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். கொளுத்துவோம் அவளை பிறகு. நமுத்துவிட்டது இப்போது விறகு.

read more…

ஆராய்ச்சி முடிவு

2009 ஆகஸ்ட் 23

அறிவுமஹாசமுத்திரத்தினில் தெறிக்கும் திவலைகளில் திளைக்கும் என் ஆராய்ச்சிகளினால் மனிதத்திற்கு என்ன பயன்? பெற்றார் சுற்றாருக்கு புரிவதில்லை. உற்றார் உறவினர் முகத்தில் சலனமில்லை. ஆராய்ச்சிமுடிவினால் நிறுத்தும் ஆட்டோவில் என் கட்டணம் குறையவில்லை. கச்சா எண்ணை பற்றாக்குறை தீரப்போவதில்லை. உலகளாவிய சூடேற்றம் குறையப்போவதில்லை. உலகமோ உச்சியோ குளிரப்போவதில்லை. அறிவியலாளர்கள் என்று பறைசாற்றும் இந்த மேட்டிமைவாத மெருகூட்டல்களினால் என்னைவிடுத்து தனியொருவனுக்கு உணவுகிட்டப்போவதில்லை. ஜெகத்தினை அழித்திடவுமில்லை. சாதித்த தனிமையிலும் இனிமை காண இயலவில்லை.

எவ்வகை விளிம்புகளையும் எட்டாத, புதிர்களை விடுவிக்காத, புரிதல்களை மேம்பிக்காத என் ஆராய்ச்சி என்ற இந்த முக்கியானுஷ்டானத்தில் இவ்வாறு நியூட்டனின் புத்தகத்திற்கு பள பள அட்டைபோடுவதினால் என்ன பலன்? கிட்டப்பார்வையின் உற்றுநோக்கலில் சக ஆராய்ச்சியாளர்களின் அங்கீகரிப்பு பரிந்துரைகளில் எனக்கு ஒரு ஆராய்ச்சி கட்டுரை வெளியாகிறது. இதைவைத்து சிலகாலம் சிலரை ஏய்க்கலாம். பலமுறை பலகாலம் செய்தால், பலரை ஏய்க்கலாம். பொறாமை அஜீரணத்தில் சிலரை ஏப்பம் விடவும் வைக்கலாம். மிஞ்சினால், என்னைப்போல் வெப்பம் சார்ந்த அறிவுச்சலனங்களில் நாட்டமுள்ள கும்பலுக்குள் ஒரு ஜான் உயரமாகலாம்; சில மணித்துளிகளுக்கு. பிறகு சலனங்களின் கொந்தளிப்பில் இயற்கையாக வேரொருவர் எ(ழு)ம்புவார். தன்னிச்சையாக எனக்கு ஏப்பம் வரும்.

நேரங்களில் சிலர் துள்ளியும் குதிப்பார். எங்கள் உலகத்திலிருந்து தற்காலிகமாக வெளியே. குளத்து மீன்களைப்போல்.

இது ஒரு வேடிக்கை குளம். முழ்காதிருக்க தன்னிச்சையாக வாலையாட்டியபடி, தலையை மேலே உயர்தியபடி, சுற்றிலும் எதிரிகளை, புகழை, நுகர்ந்தபடி, துள்ளும் மீன்களடங்கியது. அவை துக்கத்திலும் தூக்கத்திலும் கண்களை மூடுவதில்லை. அயராது ஓடிக்கொண்டே இருக்கும்; குளத்தினுள் ஆரோக்கியமாக இருப்பதற்கு. கரையில் சிலர் இந்த உற்சாகத்தை வேடிக்கை பார்த்து பிரமிப்பர். குளத்தின் கலங்கலும் மீன்களின் இரத்தத்தை நீல நிறமாய் காட்டும். கரையிலிருந்து வேடிக்கையின் ஆழம் புரியாது.

குதிக்கும் மீன்களைப்பார்த்து குழந்தைகள் கைதட்டும். பிறகு மீன்களைப்போல் தாங்களும் குதித்து நீந்த முயலும். செயல்களின் வெளிப்படை ஆற்றலில் மேல்மட்ட நீர் ஆர்ப்பரிக்கும். பரமகுஷியாகி அங்கும் இங்கும் துள்ளி, சாதித்துவிட்ட களைப்பில் திளைத்து, மீன்கள் குளத்தினுள்ளே அமிழும். ஆழ்கையில் ஆழ்வார் எனத்தோன்றும்.

காலையில் சேவலாகி கொக்கரிக்கும். குளம் கரைவரை கொப்பளிக்கும். உயரே துள்ளும் மீன்கள் வலைகளில் எளிதில் சிக்கும். அவைகளின் முயற்சி திரு வினை ஆகும். வர்த்தகமயமாக்கலில் பொரிந்து, துண்டங்களாக டப்பிகளில் அமர்த்தப்பட்டு, சோமபானத்துடன் கனவான்களுக்கு விருந்துணவாகும். வலைகளை வெறுக்கும் சில பெரிய மீன்களும் உண்டு. இவை தூண்டிலுக்காக காத்திருந்து குதிக்கும். பிறகு, அகெதெமியில் விருதுணவாகும்.

ஊரின் வளர்ச்சியில், ஆலைகளின் எழுச்சியில், கழிவுகள் பாதையமைத்து குளத்தினுள் சேரும். கழிவிரக்கத்தில் மீன்கள் பொறுக்கும். ஜொலிக்கும் கழிவில் பிறகு இரத்தினங்களை பொறுக்கும். இயற்கையின் மருட்சியில், பருவநிலை வரட்சியில் வெப்பசலனமற்று குளம் குட்டையாகி நாறும். மீன்கள் எலிகளாகி மிரளும். மூச்சு முட்டும். பெரியவை சிறியதை விழுங்கும். கற்றவை பெற்றவை நாடும். கற்றதை கரை(வ)தனில் கிடத்தும். துள்ளல் துணிவின்றி, தூண்டில் தேவையின்றி சில துறக்கும். பல இறக்கும்.

எப்படியும் குளத்தினின்று ஆத்மாக்கள் மீன்களாக வெளியேறுவதில்லை.

குழந்தைகள் பெரிதாகி கடந்து செல்லும் வேடிக்கை குளம்.

சிறுமீனைப் பெருமீனாம், சிறுமாயை பெருமாயை,
வற்றாத செல்வமே வாழ்க! நீ வாழ்க!

அறிவியல் டாட் இன்ஃபோ

2009 ஜனவரி 24
Arunn ஆல்

அறிவியலிற்காக புதிய கூட்டுப்பதிவு வலைதளம்  [http://www.ariviyal.info] தொடங்கியுள்ளது பற்றி தமிழ் கூறும் வலையுலகம் (பிரபல வலையுலகிகள் ஆதரவில்) கேள்விப்பட்டிருக்கும்.

நானும் அங்கு ஆட்டத்தில் உண்டு. இதனால் இங்கு அவ்வப்போது எழுதிவந்த அறிவியல் பதிவுகளை சற்று தட்டி கொட்டி பட்டை தீட்டி அங்கு மாற்றுவது என்று முடிவு செய்துள்ளேன். தற்சமயம் அப்பதிவுகள் இங்கு மூடிவைக்கப்பட்டுள்ளன.

முன்பே இங்கு அப்பதிவுகளை சுட்டியிருந்த பதிவர்களுக்கு நன்றி. முடிந்தால், அறிவியல் தளத்தில் பிரதி-பதிவுகளுக்கு சுட்டிகளை மாற்றியமையுங்கள்.

இங்கு எப்போதும்போல் கர்நாடக இசை, சினிமா, வாழ்கை, ஹாஸ்யம் என்று சொச்ச விஷயங்கள் தொடரும்.

எனக்குமட்டும் வரும் ஸ்பெஷலான என் எழுத்தில்.

மற்ற பதிவர்களை போல்.

ராண்டார் கை பேச்சு: தமிழ் சினிமாவும் அரசியலும்

2009 ஜனவரி 24

தமிழ் சினிமாவின் மூத்த வரலாற்றாலரான ராண்டார் கை நேற்று தமிழ் சினிமாவும் அரசியலும் என்ற தலைப்பில் ஆங்கிலத்தில் பேசினார்.  அதை பாட்காஸ்டாக, இரண்டு பகுதியில், கீழே கொடுத்துள்ளேன்.

read more…

2008 சங்கீத சீசனின் பெஸ்ட் – என் பட்டியல்

2009 ஜனவரி 13

மெட்ராஸ் மியூசிக் சீசன் என்பது ஒரு மாதத்திற்கும் மேல் நடக்கும் விஷயம். இதை எழுதுகையில் முடிவை நோக்கி நிறைய தொண்டை செருமல்களுடன் இன்னமும் நடந்து கொண்டிருக்கிறது. பத்து பதினைந்து சபாக்கள் நாளைக்கு ஐந்து கச்சேரி விதம், பத்திலிருந்து இருபது நாள் வரை கூடி சென்னையின் பல இடங்களில் நடத்துகையில் சீசனில் மொத்தம் ஆயிரம் கச்சேரிகளுக்கு மேல் நடந்திருக்கும். அவற்றில் நான் கேட்டது முப்பத்தியைந்து; மொத்தத்தில் ஐந்து சதவீதத்திற்கும் குறைவான சொற்பமே. என் சிறிய இசை காதுகளை நம்பி நான் தரவிருக்கும் அவற்றில் ஒரு பெஸ்ட் பட்டியல், சத்தியம் சாப்ட்வேரின் லாப கணக்கைவிட நிச்சயம் துல்லியமாக இருக்காது. ஒரளவிற்கு அனுமானிக்கக்கூடியதாக இருக்கலாம். மாத்யூ ஹைடனின் ஓய்வை போல.

நான் கேட்டவையிலிருந்து இதோ ஒரு பெஸ்ட் பட்டியல்.

read more…

2008 டிசம்பர் மியூசிக் சீசன் கச்சேரி பட்டியல்

2009 ஜனவரி 12

சென்னையின் (ஒரே) ஒரு USP, டிசம்பரில் சீசன் கச்சேரிகள். 2008-2009 டிசம்பர்-ஜனவரி சங்கீத சீசனில் நான் சென்று வந்த, கேட்ட, இசை கச்சேரிகள் பட்டியல் கீழே, சுருக்கமான விமர்சனங்களுடன். இவற்றில் ஒரு பெஸ்ட் பட்டியல் அடுத்த பதிவில்.

read more…

முடிந்தால் சிரியுங்கள்

2009 ஜனவரி 3

ரெட்டை வால் ரெங்குடு என்ற சிறுவன் கார்டூணிஸ்ட் மதனின் முக்கிய ஹாஸ்ய படைப்புகளில் ஒன்று. தமிழ்நாட்டு கால்வின் என்று கொள்ளலாம். புது வருடத்தை முன்னிட்டு சொந்தமாக நிறைய படம் வரைவது என்று முடிவு செய்து, ரெங்குடுவின் தாக்கத்தில் நான் வரைந்த இரண்டு படங்கள் இதோ. ஜோக் என்னுடையதுதான். முடிந்தால் சிரியுங்கள்.

read more…

வசுந்த்ரா ராஜகோபால் கச்சேரிகள்

2009 ஜனவரி 2

அவரது பூர்வீகம் ஸ்ரீரங்கமாக இருந்தாலும், இரண்டு வருடம் முன்பு மியூசிக் அகதெமியில் அவர் செய்த ஹுசேனி ஆலாபனையே எனக்கு வசுந்த்ரா ராஜகோபாலின் இசையின் மீது ஒரு உடனடி மரியாதையை வரவழைத்தது. நிரந்தரமாக.

தேன்குழல் போல கரைகின்ற குரல், ஜிகினாத்தனம் இல்லாத பாரம்பர்ய இசை, கீர்தனைகளில் வார்த்தை தெளிவு, ஆரவாரமில்லாத அழகிய நிரவல், மாங்காய் ஊறுகாய் போல தேவையான அளவு கணக்கு வழக்குகள் சேர்த்து மனோதர்மத்துடன் வரும் ஸ்வரப்ரஸ்தாரங்கள், வழுவற்ற விறுவிறுப்பு, வீணற்ற வகைகள், வசுந்த்ராவின் கச்சேரிகள் ஒரு அருமையான சங்கீத அநுபவம்.

சாருகேசி, மந்தாரி, ஹுசேனி, தேவகாந்தாரி, சாமா, சுத்தசாவேரி, வாசஸ்பதி என்று தற்கால கச்சேரி மூட்டைகளில் அடைபாடாத ராகங்களில் நன்றாக பிரஸ்தாபிக்கப்பட்ட ஆலாபனைகள், அருணாசல கவியின் ராமநாடகத்தில் இருந்தும், திவ்யபிரபந்த பாசுரங்களிலிருந்தும் சுயமாக இசையமைக்கப்பட்ட உருப்படிகள் என்று அவர் கச்சேரிகள் உத்திரவாதமாக வித்தியாசமாக இருக்கும். ஆனால் கர்நாடக இசை அடிப்படைகளில் இருந்து வழுவாத வித்தியாசங்கள்.

இருபது வருடங்களுக்கு மேல் அவர் கனடாவில் இருந்துவிட்டு 1995வாக்கிலேயே சென்னை திரும்பவந்ததை இதற்கு முக்கிய காரணமாக என்னால் நினைக்க முடிகிறது. மைலை கர்நாடக இசை மஃபியாவின் தாக்கத்திலிருந்தும் விளையும் தேக்கத்திலிருந்தும் இசையை காப்பாற்றிகொள்ள வளரும் காலங்களில் அவ்விடத்தில் இல்லாமல் இருப்பது ஒரு சிறந்த வழி.

மற்றொரு வழி விமர்சனங்களுக்கு ரொம்பவும் அலட்டிக்கொள்ளாமல், தன் திறமையின் மீது கலையாத நம்பிக்கை வைத்து அடாவடியாக தான் செய்வதையே செய்து ஸ்தாபித்துகொள்வது. சஞ்சய் சுப்பிரமனியன், டி.எம்.கிருஷ்ணா செய்வதுபோல.

read more…

Whale வேல்

2008 அக்டோபர் 20

குசினியறையில் வேலையாய் இருந்த மனைவிக்கு உபயோகமாய் அவளை உற்சாகப்படுத்திக்கொண்டு நான் சும்மா இருந்துகொண்டிருந்தேன். அப்பொழுதுதான் ஒரு வேல் ஷார்க் (Whale Shark திமிங்கலம்) படத்தை யங் வேர்ல்டிலிருந்து கனகாரியமாய் வெட்டி மகளின் நோட்டுப்புத்தகத்தில் ஒட்டியிருந்தோம்.

அவள்: நா கடலுக்கு அடீல போப்போறே(ன்), வேல் ஷார்க ஃபோட்டோ பிடிக்க; நீ கிடயாது…

நான்: (கடுப்பாகி) ஓகே; நா பழனிக்கு போறேன் முருகர பாக்க; அவர்கிட்ட கூட ஒரு வேல் இருக்கு; அத பாத்துக்கறேன்…
read more…

வஸந்தாவில் ட்விங்கில் ட்விங்கில்

2008 அக்டோபர் 20

இதை கேட்கையில் பல வருடம் முன்ப்பு கமல்ஹாஸன் டி.வி. பேட்டி ஒன்றில் பாலும் பழமும் கைகளில் ஏந்தி என்ற பாடல் வரியை மட்டும் முழு டியூனுக்கும் பாடிக்காட்டியது நினைவிற்கு வருகிறது.

முதல் ராகம் வஸந்தா. இரண்டாவது, கேதார கௌளை. (மலையாளத்து சாயலில் உள்ள) மூன்றாவது சட்டென்று பிடிபட மறுக்கிறது.

பாடுபவர் ரேவதி ஷங்கரன்; சிறிது காலமே எடிட்டராக இருந்தாலும், மங்கையர் மலரின் உள்ளடக்கத்தையும், (அதன் மூலம்) பெண்களின் சுயகவுரவத்தையும் உயர்த்தியவர். இப்போது அது மீண்டும் புளிக்காய்ச்சல் செய்வது எப்படி போன்ற விஷயங்களை அலச ஆரம்பித்துவிட்டது.

நாகஸ்வரத்தில் நீலமணி

2008 அக்டோபர் 17
Comments Off

நாகஸ்வரத்தில் நீலமணி ராகம் கேட்டிருக்கிறீர்களா. இரண்டு வருடம் முன்பு மைலை கேசவ பெருமாள் கோயிலில், வாத்தியம் வாசிப்பவரின் சம்மதத்துடன், நான் செய்த ஒரு சிறிய ரெகார்டிங்கை கேட்டுப்பாருங்கள்:

அதே வாத்தியத்தில், இன்னொரு சிறிய காபி ராகம் ஆலாபனை:

சம்பந்தப்பட்ட அனுபவத்தை சௌம்யா கச்சேரியும் நீலமணி ஆலாபனையும் என்ற கட்டுரையில் எழுதியுள்ளேன்.